நரசிம்ம ஜெயந்தி, 2023 மே 04 ம் தேதி
உக்கிர வடிவமாக இருந்தாலும் அதிகமானவர்களால் வணங்கப்படும் ரூபம் நரசிம்ம ரூபமாகும்.
நரசிம்மர் அவதரித்த தினமான நரசிம்ம ஜெயந்தி, 2023 மே 04 ம் தேதி கொண்டாடப்படுகிறது.
நரசிம்மரைப் பற்றி அரிய விஷயங்கள் சில.
நரசிம்ம பெருமாள் வருடத்திற்கு ஒரு முறை கண்திறப்பதும், அவருக்கு படைக்கப்படும் பானகத்தை குடிப்பதும் இந்த கலியுகத்திலும் நடந்து வரும் அற்புத நிகழ்வுகளாகும். கலியுகத்திலும் பக்தர்களைக் காக்க ஓடோடி வரும் தெய்வமாக நரசிம்மர் விளங்குகிறார். மனித உடலும், சிம்ம முகமும் கொண்ட நரசிம்ம ரூபம், பெருமாளின் அற்புத வடிவங்களில் ஒன்றாகும்.
நரசிம்மர் :
திருமாலின் தச அவதாரங்களில் மிகவும் தனித்துவமானது நரசிம்ம அவதாரம். தாயின் கருவில் இருந்து தோன்றாமல், தனது பக்தனைக் காப்பதற்காக தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டவர் நரசிம்மர். தாயின் கருவில் உருவாகி, வளர்ந்து வருவதற்கு தாமதமாகி விடும். அதுவரை தனது பக்தன் துன்பப்படுவானே என்பதற்காக, பக்தனைக் காப்பதற்காக அடுத்த கணமே ஓடோடி வந்தவர் நரசிம்மர்.
அதனால் தான் தீராத துன்பத்தில் இருந்து உடனடியாக மீள வேண்டும் என்றால் நரசிம்மரின் கால்களைப் பிடிக்க வேண்டும் என சொல்வார்கள். உக்ரமான வடிவங்கள் என வணங்குவதற்கு அஞ்சும் நரசிம்மர், காளி போன்ற தெய்வ ரூபங்கள், தன்னைச் சரணடைந்த பக்தர்களைக் காப்பதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும் எடுக்கப்பட்ட வடிவங்களாகும். நரசிம்மர் பல இடங்களில் உக்ர வடிவத்துடன் காட்சி தந்தாலும், சில இடங்களில் சாந்த சொரூபமாக, யோக நிலையில் காட்சி தருகிறார். இன்னும் சில இடங்களில் லட்சுமியை தனது தொடை மீது அமர வைத்து, ஆலிங்கனம் செய்தபடி, புன்னகையுடன் லட்சுமி நரசிம்மராக காட்சி தருகிறார்.
நரசிம்மரைப் பற்றி 18 அரிய தகவல்கள்.
1. நரசிம்மரை வழிபடுபவர்களை எந்த தீய சக்திகளும் நெருங்க முடியாது.
2. நரசிம்மருக்கு விருப்பமான சிவப்பு அரளி, செம்பருத்தி பூக்களால் அர்ச்சித்து, நைவேத்தியமாக பானகம் படைக்க வேண்டும்.
3. நரசிம்மரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால் கணவன் - மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
4. நரசிம்ம ஜெயந்தி நாளில் நரசிம்மரை எந்த ரூபத்திலும் வழிபடலாம். கலசம் வைக்க வேண்டிய அவசியமில்லை.
5. பெண்களும் நரசிம்மரை விரதமிருந்து வழிபடலாம். ஆனால் உடல் தூய்மையும், மனத்தூய்மையும் அவசியம்.
6. வீட்டில் நரசிம்மரை வழிபடுவதாக இருந்தால் வடமேற்கு திசையில் வைத்து வணங்க வேண்டும்.
7. நரசிம்ம ஜெயந்தி அன்று குழந்தைகளுக்கு நரசிம்ம அவதாரம் பற்றிய கதையைக் கூறினால், பிரகலாதனுக்கு கிடைத்த நரசிம்மரின் அருள், அந்த குழந்தைகளுக்கும் கிடைக்கும்.
8. நரசிம்மருக்காக விரதம் இருக்கும் போது கண்டிப்பாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
9. நரசிம்மரின் அருளை சீக்கிரம் பெற விரும்புபவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
10. வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் நரசிம்மரை வழிபட்டுவிட்டு சென்றால் வெற்றி கிடைக்கும்.
11. பிரகலாதனைப் போல் உறுதியான பக்தி கொண்டவர்களுக்கு நரசிம்மர் அருளை வாரி வழங்குவார்.
12. நரசிம்மரை வழிபட்டு வந்தால் பெயர், புகழ் ஆகியவை கிடைக்கும்.
13. நரசிம்மரை, மருத்யுவேஸ்வாகா என கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
14. பக்தியுடன் தன்னை சரணடையும் பக்தர்களை எப்படி நரசிம்மருக்கு பிடிக்குமோ, அது போல, உரிமையுடன் இதை எனக்கு செய்து கொடு என கேட்கும் பக்தனையும் நரசிம்மருக்கு பிடிக்கும். அவர்கள் கேட்டதை உடனடியாக நிறைவேற்றி வைப்பார்.
15. நரசிம்மர் கோவில் கொள்ளும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
16. நரசிம்மர், பிரகலாதனுக்காக அந்திப்பொழுதில் அவதரித்த தினம் வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி ஆகும். .
17. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார், பக்தன் உண்மையான பக்தியுடன் அவரை அழைத்தால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக எடுக்கப்பட்டதே நரசிம்ம அவதாரம் ஆகும்.
18. ராமருக்கு அடுத்தபடியாக வைணவர்களால் அதிகம் வணங்கப்படும் திருமாலின் ரூபமாக நரசிம்மர் உள்ளார்.

No comments:
Post a Comment